சென்னையில் திடீர் மழை: போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை மாநகரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. காற்றழுத்த தாழ்வுமண்டலம் நேற்று இரவு சென்னையில் இருந்து 460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது.

இதன் தாக்கத்தால் சென்னையில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, பெரம்பூர், மாதவரம், பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கோயம்பேடு, கே.கே.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றிரவு கனமழை பெய்தது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், ஏராளமான கிறிஸ்தவர்கள் நேற்று இரவு தேவாலயங்களுக்கும், கேக் வாங்க பேக்கரிகளுக்கும் சென்றிருந்தனர். இரவில் பெய்த திடீர்மழை காரணமாக மழையில் சிக்கி பொதுமக்கள் சிரமத்துக்குஉள்ளாயினர்.

மழையால் சாலைகளில் நீர் தேங்கிய நிலையில், அலுவலகங்களில் இருந்து வீட்டுக்கும், கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கும் மக்கள் புறப்பட்ட வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்தவாறு சென்றன. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறுசாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.