பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ரேஷன் கார்டுதாரர்கள் அப்செட்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் மீது, ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், நியாய விலைக் கடைகள் மூலம், பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும். மேலும் இதனுடன், ரொக்கப் பரிசும் வழங்கப்படும். முன்னாள் முதலமைச்சர்கள், ஜெ.ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரது காலத்தில் இருந்தே இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பொது மக்கள் பாதிக்கப்பட்டதால் அவர்களது வாழ்வாதாரம் கருதி இந்தத் தொகை வழங்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

எனினும் இது குறித்து விளக்கம் அளித்த திமுக உள்ளிட்ட கட்சிகள், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே, 2,500 ரூபாயை அதிமுக அரசு வழங்கியதாக கூறப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதி வாய்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்துள்ளது.

“இந்தத் தொகை போதுமானது இல்லை என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” என்றும், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்க வேண்டும் என, ரேஷன் அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதனால் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட முடிந்தது. ஆனால் தற்போது வெறும் 1,000 ரூபாய் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில், இந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

மேலும், பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது கரும்பு தான். அந்த கரும்பும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெறவில்லை. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை சேர்த்து வழங்குவதோடு, பரிசுத் தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.