ஜனவரி 1ஆம் தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஜனவரி 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும்.

இதற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரி அணில்குமார் சிங்கால் திருமலையில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட வாயில் தரிசனம் இருக்கும். இதற்காக ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சம் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் எதிரே விஷ்ணுநிவாசம், ரெயில் நிலையம் பின்புறம் 2 மற்றும் 3 வது சத்திரங்கள், பேருந்து நிலையம் எதிரே சீனிவாசம் வளாகம், இந்திரா மைதானம், ஜீவகோனா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி, பைராகிப்பட்டேடாவில் ராமநாயுடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி, எம்.ஆர். பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி ராமச்சந்திர புஷ்கரணி ஆகிய இடங்களில் ஜனவரி 1ம் தேதி இலவச சர்வதர்ஷன் டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். 10 நாளுக்கான டோக்கன் ஒதுக்கீடு முடியும் வரை தொடர்ந்து டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்று அணில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசி வருவதை முன்னிட்டு, நாளை (செவ்வாய்க்கிழமை) கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம், கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், நாளை காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.