டெல்லியில் டெலிவரி டிரோன் விழுந்து மெட்ரோ ரயில் நிறுத்தம்

புதுடெல்லி: டெல்லி ஜசோலா விகார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று பிற்பகல் 3 மணி அளவில் டிரோன் ஒன்று தண்டவாளத்தில் விழுந்தது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி உடனடியாக ஜசோலா விகார் ரயில் நிலையம் முதல் தாவரவியல் பூங்கா ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. விசாரணையில் அந்த டிரோன் மருந்து நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், பொருட்களை டெலிவரி செய்ய பயன்படுத்தப்பட்ட டிரோன் என்றும் தெரிந்தது.

அந்த டிரோனில் இருந்து சில மருந்துகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து, சிறிது நேர நிறுத்தத்திற்குப் பிறகு மெட்ரோ சேவை வழக்கம் போல் தொடங்கப்பட்டது. ஆன்லைன் வர்த்தகத்தின் அடுத்தகட்டமாக பொருட்களை டெலிவரி செய்ய டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உயர் பகுதிகளில் டிரோன்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், உரிய அனுமதியின்றி அவற்றை பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.