தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரம்: எங்கெல்லாம் மழை?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 25ஆம் தேதி (நேற்று) காலை நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 320 கி.மீ.தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, திரிகோணமலைக்கு தெற்கே இலங்கை கடற்கரையைக் கடந்து, பின்னர் மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 26ஆம் தேதி (இன்று) காலையில் குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைபெறும்.

இதனால் இன்று தென்தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில்
கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 27ஆம் தேதி (நாளை) சில இடங்களிலும், வரும் 28, 29ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.