பெண்களின் உரிமையை மதியுங்கள்: ஆப்கனுக்கு கத்தார் அறிவுரை

கத்தார்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செய்வதற்கான உரிமையை மதியுங்கள் என்று தலிபான்கள் அரசிடம் கத்தார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆப்கனில் பல்கலைகழகங்களில் பயில பெண்களுக்கு தலிபான்கள் அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மீண்டும் சர்ச்சையான உத்தரவை தலிபான்கள் அறிவித்தனர். ஆப்கனில் உள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பெண்கள் ஊழியர்களாக இருப்பதற்கு தலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆப்கனின் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில், தலிபான்களின் இந்த உத்தரவை கத்தார் விமர்சித்துள்ளது. இதுகுறித்து கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “பெண்கள் வேலை செய்வதற்கான உரிமையை மதியுங்கள். தாங்கள் செய்யும் வேலையை சுதந்திரமாக தேர்ந்தெடுப்பது என்பது மனிதர்களுக்கான உரிமை. ஆப்கனில் பெண்கள் ஆடை கட்டுபாட்டை சரியாக கடைப்பிடிக்கவில்லை என்று கூறி தொண்டு நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்கு தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளதை அறிந்து கவலை கொள்கிறோம். தலிபான்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், தொடர்ந்து பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல்களிலே தலிபான்கள் ஈடுபட்டு வருவது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.