மறையாத துயரச் சுவடுகள்…தமிழ்நாட்டில் சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவு: கடலோர கிராமங்களில் மக்கள் அஞ்சலி

சென்னை: தமிழ்நாட்டில் சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்திய மண்ணில் ‘சுனாமி’ ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. டிச., 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்துஎழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. இதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிர் சேதத்துடன், கோடிக் கணக்கில் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியத

இதற்கு முன் சுனாமி என்ற வார்த்தையை இந்தியர்கள் கேள்விப்பட்டதில்லை. ‘கடல் அலை’ ஊருக்குள் வந்த போது தான் ‘சுனாமி’ என தெரிந்தது. இதன் கோபம் வெறும் பத்து நிமிடம் தான். அது ஏற்படுத்திய சோகம் என்றும் அழிவதில்லை. இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரியை ‘சுனாமி’ தாக்கியது. 12,000 பேர் பலியாகினர். இதில் 7,000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலுார், கன்னியாகுமரி பாதிக்கப்பட்டன. இதன் தாக்கம் இன்றும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று சென்னை முதல் குமரி வரை கடலோர கிராமங்களில் சுனாமி தாக்கியதின் 18ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி பூக்களை தூவி ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

18 ஆண்டுகளை கடந்தும்… மறக்க முடியாத துயரம்…

இந்த சுனாமி நினைவு தினத்தை, நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் சோகத்துடன் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 26ம் தேதியை அனுசரித்து வருகின்றனர். சுனாமி பேரலையில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்கு இருந்தாலும் அன்றைய தினம் வேளாங்கண்ணியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நம்பியார் நகர், செருதூர் என்று பல்வேறு இடங்களில் சுனாமி நினைவுதின அமைதி பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இடைவிடாது இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

நம்பியார் நகர் கடற்கரையில் அமர்ந்து சுனாமியால் உயிர் இழந்தவர்கள் நினைவாக தர்ப்பணம் செய்வார்கள். நம்பியார்நகர் பெண்கள், கடற்கரையில் அமர்ந்து இறந்தவர்களை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது தங்களது சோகத்தை வெளிப்படுத்துவார்கள். இதே போல் உயிரிழந்த ஆயிரம் பேரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு முன் மூன்று மதங்களின் கூட்டு பிரார்த்தனை நடைபெறும்.

பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்துவார்கள். ஒரு சிலர், தங்களது உறவினர் விரும்பும் உண்ணும் உணவுபொருட்களை வைத்து வழிபாடு நடத்துவது இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது. சுனாமியால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கிப்பயிலும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவார்கள்.

கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் பிரார்த்தனை

சுனாமி நினைவு நாளான  மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் செல்லாமல் இருப்பது இன்று வரை உள்ளது. காலை முதல் மாலை வரை எவ்வித உணவும் உண்ணாமல் சுனாமியால் உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய, நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று வரை பிரார்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை  : 6064

தாய் மற்றும்  தந்தை என்று இரண்டு பேரையும் இழந்து ஆதரவின்றி நின்ற குழந்தைகள்: 243

தாய் அல்லது தந்தை என இருவரில் ஒருவரை மட்டும் இழந்தவர்கள் : 1329

கிறிஸ்துமஸ் விழாவிற்காக வேளாங்கண்ணிக்கு வந்திருந்த வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்: 536

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் : 240

தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். உயிர்ப்பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.