‛வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் இருக்கைகள் சேதம் : தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியிருக்கும் இந்தப் படம் விஜய்யின் முதல் நேரடி தெலுங்கு படமாக திரைக்கு வருகிறது.

விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிச.24ம் தேதி மாலை நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோருடன் கலந்து கொண்டார். இயக்குநர் வம்சி, ராஷ்மிகா மந்தானா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடகி மானசி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை காண்பதற்காக காலை முதலே ரசிகர்கள் அங்கு கூட தொடங்கினர். நிகழ்ச்சிக்காக பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த இசை விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கு பாஸ் பெற்ற ரசிகர்கள் உள்ள நுழைவதற்காக நேரு ஸ்டேடியத்தின் வெளியே காத்திருந்தனர்.

அப்போது யார் முதலில் நுழைவது என்பது தொடர்பாக ரசிகர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் போஸ்டர்களை கிழித்தும், செருப்புகளை வீசும் செயல்களிலும் ஈடுபட்டனர். இந்த கூட்ட நெரிசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட சிலர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதம் அடைந்துள்ளது. இன்று(டிச., 26) சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளதாக அரங்கம் பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. மேலும், சேத கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.