சென்னை: அரசியலில் போலி ஓ.பன்னீர்செல்வம் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர். மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், ”பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அதுபோல் அரசியலில் போலியானவர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும்” என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு, ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காதது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.