கடலூர் மாவட்டத்தை அடுத்து சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழகம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் “தமிழகத்தில் மயிலாடுதுறை, பெரம்பலூர், திருப்பத்தூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் தேவை என மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் ரூ.13,000 கல்வி கட்டணம் வசூலிக்கப்படும். ஏற்கனவே பயின்ற மாணவர்களுக்கு ரூபாய் 113 கோடி ரூபாய் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
தமிழக அரசு 13 மருத்துவ பாட புத்தகங்களும் 10 பொறியியல் பாட புத்தகங்களும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளது. வரும் ஜனவரி 18ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் தமிழாக்கம் செய்யப்பட்ட மருத்துவ மற்றும் பொறியியல் துறையின் புத்தகங்களை வெளியிட உள்ளார்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.