திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அசையா சொத்துகள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையானுக்கு சொந்தமாக வீடுகள், வீட்டு மனைகள், நிலங்கள் உள்ளன. நாடு முழுவதும் ஏழுமலையானுக்கு 930 இடங்களில் அசையா சொத்துகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்திலும் சுவாமிக்கு சொத்துகள் உள்ளன.
இந்த அசையா சொத்துகளின் இன்றைய மதிப்பு ரூ.85,705 கோடியாகும். இது தவிர, தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என நவரத்தினங்களால் ஆன நகைகள், கிரீடங்கள் என பல கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளன. இதில் 9,259 கிலோ தங்கம், தங்க பிஸ்கெட்டுகளாக பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு வட்டியாக திருப்பதி தேவஸ்தானம் தங்கத்தையே பெற்று வருகிறது.
இந்த சூழலில் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள கோடிவலசா கிரா மத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி நேற்று காலை திருப்பதிக்கு வந்தார். திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் எஸ்டேட் அதிகாரி மல்லிகார்ஜுனாவிடம் தனக்கு சொந்தமான ரூ. 70 லட்ச ரூபாய் வீட்டின் ஆவணங்கள் மற்றும் வீட்டின் சாவியை கொடுத்து, இதனை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்குவதாக கூறிவிட்டு, பத்திரங்களை வழங்கி விட்டு சென்றார். தற்போது இதுவும் ஏழுமலையானின் சொத்து கணக்கில் சேர்ந்துவிட்டது.