நாகை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் ஒரு வாரத்துக்கு பிறகு டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் இல ங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதனால் கடந்த 20ம் தேதி முதல் டெல்டாவை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. கடல் சீற்றமும் படிப்படியாக குறைந்தது. இதனால் மீனவர்கள், நேற்றிரவு முதல் கடலுக்கு செல்லும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று காலை அனுமதி டோக்கன், மீன்வளத்துறை சார்பில் வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து நாகை மாவட்டத்தில் 700 விசைப்படகுகள், 3,000 பைபர் படகுகளில் ஒரு லட்சம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மயிலாடுதுறையில் கொள்ளிடம், பூம்புகார் உட்பட மாவட்டம் முழுவதும் 3,000 விசைப்படகு, 5,000 பைபர் படகுகளில் 10,000 மீனவர்கள், தஞ்சை மாவட்டத்தில் 10,000 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,500 மீனவர்கள், காரைக்கால் மாவட்டத்தில் 5,000 மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.