ஹைதராபாத்: தெலங்கானா மாநில ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியிலிருந்து பாஜகவிற்கு மாற ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ. 100 கோடி வீதம் 4 எம்.எல்.ஏக்களை பேரம் பேசிய வழக்கை சிபிஐக்கு மாற்ற தெலங்கானா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய, நந்தகுமார், ராமச்சந்திரபாரதி மற்றும் சிம்ஹயாஜி ஆகியோர் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் தலா ரூ. 100 கோடி வழங்குவதாக பேரம் பேசியதாக, பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏவான ரோஹித் ரெட்டி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா அரசு உத்தரவிட்டதின்பேரில் இவ்வழக்கை சிறப்பு விசாரணை குழு நடத்தி வந்தது.
பாஜக குற்றச்சாட்டு: ஆனால், தொடக்கம் முதலே இது பாஜகவிற்கு அவப்பெயர் வாங்கித் தரவே முதல்வர் சந்திரசேகர ராவ் ஆடும் நாடக மென பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், ஆரம்பத்திலேயே இவ்வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென பாஜக சார்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை பல நாட்களாக நடைபெற்ற நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், இவ்வழக்கு உடனடியாக சிபிஐ.க்கு மாற்றப்படுகிறது. இனி இவ்வழக்கை சிறப்பு விசாரணை குழு நடத்த தேவையில்லை. இதுவரை விசாரணை யில் கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தையும் சிபிஐ யிடம் சிறப்பு விசாரணை குழு ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கு, பாஜகவினர் வரவேற்பு தெரிவித்த நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக சிறப்பு விசா ரணைக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.