சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் மற்றும் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் தேவசகாயம் – ராணி தம்பதி. இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில், மூத்த மகள் பிரதீபாவுக்கு ஜேம்ஸ் என்பவருடன் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள பிரதீபா நேற்று முன்தினம் மதியம் குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அவளை மருத்துவமனையில், சேர்த்திருப்பதாகவும் பிரதீபாவின் அம்மாவிற்கு ஜேம்ஸ் தகவல் அளித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிரதீபா குடும்பத்தினர், அம்பத்தூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர். அங்கு பிரதீபா உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராணி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது:- “வரதட்சணை காரணமாக ஜேம்ஸ் வீட்டுக்கும், எங்களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. தற்போது நான்கு மாத கர்ப்பிணியான எனது மகள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் எங்கள் வீட்டுக்கு வந்தார்.
கடந்த 21-ந் தேதி வீட்டுக்கு வந்த ஜேம்ஸ், பிரதீபாவை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதன் பின்னர், அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக எனக்கு போன் வந்தது. வந்து பார்த்தால் எனது மகள் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. என்னுடைய மகள் சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரதீபாவுக்கு திருமணம் ஆகி ஏழு மாதமே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.