கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிஐ எஸ்பிக்கு சிபிசிஐடி சம்மன்

கோவை: கொடநாடு கொலை வழக்கில் சிபிஐ எஸ்பி முரளி ரம்பாவுக்கு, சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி உள்ளது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறு விசாரணை நடத்தப்பட்டது. தனிப்படையினர் சசிகலா உள்பட 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. தனிப்படை போலீசார் 1,500 பக்கம் கொண்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதேபோல், மற்றொரு நகல் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுக்குழு சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு முன் அவர் விசாரணைக்காக ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-ல் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்தவர் முரளி ரம்பா. தற்போது அவர், சிபிஐயில் பணிபுரிவதால் அவருக்கான சம்மனை சிபிஐ தலைமைச் செயலகத்துக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.