திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விமர்சையாக நடைபெற்றது. தங்க அங்கி அணிவித்து ஐயப்பனை பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். சபரி மலையில் நவம்பர் 16-ம் தேதி மண்டலபூஜை தொடங்கியதில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்தரிசித்து வந்தனர்.
41 நாட்கள் நீடித்த மண்டல பூஜையின் இறுதி நிகழ்வின் போது, திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கியை ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம். அதன்படி நேற்று பம்பை கணபதி கோயிலில் இருந்து தங்க அங்கி சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஐயப்பனுக்கு சந்தன கலப்பு, மஞ்சள் நீராட்டு நடத்தப்பட்டது, அதன் பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மண்டல பூஜை முடிவடைந்ததும் பக்த்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு நடை அடைக்கப்படும். மீண்டும் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.