சென்னை: தமிழக அரசில் பணியாற்றும் ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசின் நலத் திட்டங்களுக்கு அச்சாணியாகத் திகழும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் (போனஸ்) வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து, சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்களுக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
‘சி’, ‘டி’ பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும். இந்த மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்குவதால் அரசுக்கு ரூ. 221.42 கோடி செலவு ஏற்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.