'பெலகாவி எங்களுக்கு தான்..!' – மகாராஷ்டிர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

பெலகாவி விவகாரம் தொடர்பாக, மகாராஷ்டிரா – கர்நாடகா இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்திற்கு இரு மாநிலங்களும் பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகின்றன. பெலகாவி, தற்போது கர்நாடகா வசம் இருந்தாலும், அடிக்கடி இரு மாநில எல்லை பகுதிகளில் தகராறு ஏற்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்ற கர்நாடக மாநில அரசு பேருந்துகள் மீது, அம்மாநிலத்தினர் சிலர் கற்கள் வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. இரு மாநில எல்லை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, அண்மையில், பெலகாவியில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், “பெலகாவி மாவட்டம் கர்நாடக மாநிலத்திற்கு தான் சொந்தம்; இந்த விவகாரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது” என, முதலமைச்சர் பசவராஜ் தலைமையிலான பாஜக அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில், கர்நாடக மாநில அரசுக்கு போட்டியாக, மகாராஷ்டிர மாநில அரசும் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அந்தத் தீர்மானத்தில், “பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேசும், பெல்காம், கார்வார், பிதார், நிபானி, பால்கி உள்ளிட்ட 865 கிராமங்களும் மகாராஷ்டிர மாநிலத்திற்குள் கொண்டு வரப்படும். அதற்கு என்ன தேவையோ அதை உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர மாநில அரசு செய்யும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியும், மகாராஷ்டிர மாநிலத்தில், பாஜக கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.