பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

தகுதி வாய்ந்த அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு உரிய முறையில் சென்றடைய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், தகுதி வாய்ந்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை.

அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின.

இதற்கிடையே, 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், தகுதி வாய்ந்த அரிசி அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் உரிய முறையில் சென்றடைய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலமாக ரொக்கப் பணம் வழங்கப்பட உள்ளது.

1,000 ரூபாய் ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் இன்றும், நாளையும் வினியோகம் செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. டோக்கன் முறையால், குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர விரயம் மற்றும் அலைச்சல் ஏற்படுவது குறையும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி, பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.