கோவையில் நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் குற்றவாளிகளை கோவைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கோவை கார் குண்டு வெடிப்பு சம்பந்தம் தொடர்பாக திட்டம் தமிழகத்திலேயே தீட்டப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீவிரவாதிகள் கூட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 2022 பிப்ரவரியில் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர், கடம்பூர் வனப்பகுதியில் தீவிரவாதிகள் கூட்டம் நடத்தி சதி திட்டம் தீட்டி உள்ளனர். இந்த கூட்டத்தில் கோவை கார் கொண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா மூபின் கலந்து கொண்டுள்ளார். இந்த வழக்கு சம்பந்தமான கைது செய்யப்பட்டுள்ள பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் நடைபெற்ற சதிக் கூட்டத்திற்கு உமர் பாரூக் தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் மொத்தம் 5 பேர் பங்கேற்றுள்ளனர்” என தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கோவை கார் கொண்டு வெடிப்பு தொடர்பாக தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு அமைப்பினர் இந்த சம்பவத்தில் கைதான உமர், அசாருதீன், இதயத்துல்லா, சனோலஃபர் அலி ஆகியோர் ஜமேஷா மூபினுக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.