சீனாவில் உருமாறிய பி.எஃப் 7 வகை கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் பி.எஃப்7 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மதுரை சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு சோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமான மூலம் மதுரைக்கு வந்த ஆறு வயது மகள் மற்றும் அவருடைய தாய்க்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியாகி உள்ளது. இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மதுரை வந்து இறங்கிய பிரதீபா என்ற பெண் பயணிக்கும் அவரது 6 வயது மகள் பிரத்தியங்கிர ரிகாவுக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கி உள்ள பிரதீபா மற்றும் அவருடைய மகளை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இவர்கள் பயணித்த விமானத்தில் பயணம் செய்த 70 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மதுரை விமானத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.