தேயிலை தோட்டத்தை குறைந்த விலைக்கு கேட்டு மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் மீது வழக்கு

நீலகிரி: முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் மீது தேயிலை தோட்டத்தை குறைந்த விலைக்கு கேட்டு மிரட்டியதாக மஞ்சூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சூரில் ஓய்வுபெற்ற கூட்டுறவு நிறுவன கணக்காளர், அவரது மனைவிக்கு சொந்தமான தோட்டத்தை கேட்டு பிராட்டியதாக புகார் எழுந்த நிலையில் வழக்கானது தொடரப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மணிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (71) அவரது மனைவி பிரேமா பெயரில் 15 சென்ட் தேயிலை தோட்டம் உள்ளது. நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். மணிக்கல் மட்டம் பகுதியில் ராஜூவுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் அவர் தேயிலை விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இவரது தேயிலை தோட்டத்தை ஒட்டி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனின் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், தேயிலை தொழிற்சாலை கட்டப்போவதாக, ராஜூவிடம் இடத்தை விற்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜூ மறுத்து வந்துள்ளார். இந்நிலையில்,  புத்திசந்திரன் அந்த இடத்தில் சாலை அமைப்பதற்காக தேயிலை தோட்டத்தில் உள்ள செடிகளை பொக்லைன் மூலம் அகற்றியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜூ மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனக்கு சொந்தமான இடத்தில் தேயிலை தோட்டத்தை குறைந்த விலைக்கு கேட்டு மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். புகாரின் பேரில் மஞ்சூர் போலீசார் ராஜு புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.