தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து எடப்பாடியை பொதுச்செயலாளராக இந்திய சட்ட ஆணையம் அங்கீகாரம்

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்துள்ள கட்சியின் வரவு செலவு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவித்து அவரை இடைக்கால பொது செயலாளராக அங்கீகரித்திருந்தது. இந்நிலையில், ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறையின் கீழ் செயல்படும் சட்ட விவகாரங்களுக்கான இந்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக.வின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து கடிதம் அனுப்பி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கடந்த மாதம் 29ம் தேதி இந்திய சட்ட ஆணையத்தின் கூட்டம் நடந்தது. இதில், தேசிய அரசியல் கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையம், அரசு உயரதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை கருத்து கணிப்பு நடத்தி பெற முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து கட்சிகளுக்கும் இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. டிசம்பர் 23ம் தேதியிடப்பட்டு அதிமுகவுக்கு அனுப்பிய கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொது செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரம், இந்திய தேர்தல் ஆணையத்தால் இடைக்கால பொதுசெயலாளராக அங்கீகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, இந்திய சட்ட ஆணையத்தின் கடிதம் மூலம் அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இது அதிமுக.வின் ஓபிஎஸ் தரப்புக்கு  பின்னடைவாக கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.