நடிகை தற்கொலை வழக்கு; காதலனுக்கு காவல் நீட்டிப்பு.!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது சக நடிகரான ஷீசன் முகமது கான், துனிஷாவின் தாயின் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இருவரும் காதலித்து வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு பிரிந்ததாகவும், இது துனிஷாவை தற்கொலைக்குத் தள்ளியிருக்கலாம் என்று இந்த வழக்கின் எஃப்ஐஆர் கூறுகிறது.

அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் பாஜக எம்எல்ஏ ராம் கதம், நடிகை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் “லவ் ஜிஹாத்” சந்தேகம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, அனைத்து கோணங்களிலும் ஆராயப்படும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும், துனிஷா ஷர்மாவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் ராம் கதம் கூறினார்.

“தற்கொலைக்கு காரணம் என்ன? இதில் லவ் ஜிகாத் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? விசாரணையில் உண்மை தெரியவரும், ஆனால் துனிஷா ஷர்மாவின் குடும்பத்திற்கு 100 சதவீதம் நீதி கிடைக்கும். மேலும் இது லவ் ஜிகாத் என்றால், அதன் பின்னணியில் உள்ள அமைப்புகள் மற்றும் சதிகாரர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்துவார்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

ஷீசன் முகமது கானை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க மும்பை வசாய் நீதிமன்றம் இன்று மதியம் அனுமதித்தது. 20 வயதான நடிகை துனிஷா, படப்பிடிப்பின் போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்; நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் கதவை உடைத்து திறக்க நேரிட்டதாக வாலிவ் போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு 1:30 மணியளவில் படப்பிடிப்பு குழுவினர் நடிகையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்து பெண் ஷ்ரத்தா வால்க்கர் படுகொலைக்கு பிறகு, தாங்கள் பிரிந்துவிட்டதாக துனிஷாவின் முன்னாள் காதலனும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டவருமான ஷீசன் முகமது கான் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணையில் அவர் கூறும்போது, ‘‘ இந்து பெண் ஷ்ரத்தா வால்க்கரை அவருடைய முஸ்லீம் காதலன் படுகொலை செய்த பிறகு நாட்டில் நிலமை மாறிவிட்டது.

இரு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது என்பது குற்றமாக மாறிவிட்டது. எனவே நாங்கள் பிரிந்து விட்டோம். துனிஷா இதற்கு முன்னதாக தற்கொலை முயற்சி செய்துள்ளார்’’ என அவர் கூறினார். இந்தநிலையில் ஷீசன் முகமது கானுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.