சென்னை: “பொங்கல் கரும்பு முழுக்க முழுக்க தமிழக விவசாயிகளிடமிருந்து தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும்; வெளிமாநிலங்களில் இருந்து வாங்கக் கூடாது. கொள்முதலில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.35 விலை வழங்கப்பட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததை முதன் முதலில் சுட்டிக்காட்டி, அதையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்தியது நான் தான். பாமகவின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியதன் நோக்கம் அரசை நம்பி கரும்பு சாகுபடி செய்த உழவர்கள் இழப்பை சந்திக்கக் கூடாது என்பதற்காகத் தான். தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் லட்சக்கணக்கான உழவர்கள் பயனடைவார்கள்.
பொங்கல் கரும்பு முழுக்க முழுக்க தமிழக விவசாயிகளிடமிருந்து தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும்; வெளிமாநிலங்களில் இருந்து வாங்கக் கூடாது. கொள்முதலில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.35 விலை வழங்கப்பட வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பரிசுத் தொகுப்பு விநியோகத்துக்கான டோக்கன் வழங்கும் பணி வரும் ஜன.3-ம் தேதிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.