திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேலதேவதானத்தை சேர்ந்தவர் செல்வம் (23). கூலித்தொழிலாளி. இவருக்கும், 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து வைக்க முடிவு செய்தபோது செல்வம் வீட்டில் வரதட்சணை கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்னையில் கடந்த 2019ல் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், செல்வத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த செல்வம் மறைத்து வைத்திருந்த அரளி விதைகளை எடுத்து சாப்பிட்டார். இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வழக்கில் செல்வத்தின் தந்தை, தாயார் மற்றும் உறவினர் விடுதலை செய்யப்பட்டனர்.
