திருப்பத்தூர் மாவட்டத்தில் இலங்கையின் முன்னாள் முதலமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான செந்தில் தொண்டமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது மனிதாபிமான அடிப்படையில் பல நாடுகள் உதவின. ஆனால், அந்த நாடுகளையெல்லாம் விட இந்தியா அதிகளவு உதவிகள் செய்துள்ளது. இதன் மூலம் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையேயான உறவு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இலங்கையில் டாலர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், பிற நாட்டு கரன்சிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கைக்கு ஐ.எம்.எப். நிதி கிடைத்தால் இன்னும் இரு ஆண்டுகளில் பழைய நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.
இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணம், “உள்நாட்டு போருக்கு பிறகு இலங்கை அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா அதிக அளவு முதலீடு செய்தது. அதனால், சீனாவிற்கு அதிகளவு வட்டி கட்ட வேண்டியது தான். மேலும், சேது சமுத்திர திட்டம் தொடர்பாக இந்தியா தான்முடிவு செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.