சென்னை: போலி ஆவணம் மூலம் நூதன மோசடி… கிரையம் செய்து நிலத்தை அபகரிக்க முயற்சி!

பெரும்பாக்கத்தில் போலி ஆவணம் தயாரித்து கிரையம் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் காமராஜ் என்பவருக்கு சொந்தமான 22½ சென்ட் காலி இடம் உள்ளது. அந்த இடத்தை விற்பனை செய்ய உள்ளதாக தரகர்கள் ஸ்ரீராம், சக்கரபாணி ஆகியோர் மூலம் சேலையூரைச் சேர்ந்த நாராயணன் (56) என்பவருக்கு தெரியவந்தது. அதன் பேரில் காமராஜை கடந்த 2006 ஆம் ஆண்டு சந்தித்து பேசி 20 லட்ச ரூபாய்க்கு கிரையம் பேசி முன் பணமாக ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து பத்திரத்தில் நாராயணன் எழுதி வாங்கி உள்ளார். 90 நாட்களில் மீதி பணத்தை கொடுத்து பத்திரபதிவை செய்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
image
ஆனால், 90 நாட்களை கடந்தும் இடத்தை கிரையம் செய்யவில்லை, இதனால் காமராஜ் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை நாராயணனிடம் திருப்பித் தந்துள்ளார். இதையடுத்து பணம் பெற்றதற்கு எழுதி கொடுக்காமலும், பணம் கொடுத்த போது எழுதி வாங்கிய பத்திரத்தை திருப்பித் தராமலும் காமராஜை மிரட்டியுள்ளார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நாராயாணன் அந்த இடத்தை அவரது மனைவியின் பூர்வீக சொத்து என போலியாக ஆவணம் தயார் செய்து 12.6 சென்ட் நிலத்தை தரகர்கள் ஸ்ரீராம், சக்கரபாணி ஆகியோரின் சாட்சி கையொப்பமிட்டு தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
காமராஜ்-க்கு இது தெரியவந்ததை அடுத்து அவர், நாராயணனிடம் கேட்டுள்ளார். அப்போது நாராயணன் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து காமராஜ் தாம்பரம் மாநகர காவல், மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாராயணனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.