தாஜ்மஹாலை பார்க்க வந்த வெளிநாட்டு பயணிக்கு கொரோனா: தலைமறைவானதால் பரபரப்பு

ஆக்ரா: ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக வந்த அர்ஜென்டினாவை சேர்ந்த சுற்றுலா பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். சீனாவில் புதிதாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்ட இத்தகைய வைரஸால் சீனாவில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவாமல் இருப்பதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் மரபனு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், தாஜ்மஹாலைப் பார்வையிடுவதற்காக வந்த அர்ஜென்டினாவை சேர்ந்த சுற்றுலா பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.

டிசம்பர் 26 அன்று தாஜ்மஹாலைப் பார்வையிடுவதற்காக அர்ஜென்டினாவில் இருந்து வந்த ஒரு சுற்றுலாப் பயணி ஒருவர் ஆக்ராவிற்கு விமானம் மூலம் வந்துள்ளார். அவருக்கு கொரோனா பரிசோனை செய்யப்பட்ட நிலையில், அந்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரை தேடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.