மீண்டும் லாக்டவுன்?; பகீர் கிளப்பிய மத்திய சுகாதார துறை!

சீனாவில் பரவி வரும் பிஎஃப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு, தங்களது ஆலோசனையை வழங்கின.

இந்த நிலையில், பிஎஃப்.7 கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடியபோது, ‘மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு, கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இதற்கு முன்பு கொரோனா பரவலை தடுக்க பணியாற்றியது போலவே தற்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கொரோனா கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி சோதனையை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

இதன்படி அந்தந்த மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இதன் ஒரு பகுதியாக BF.7 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை கடந்த 24ம் தேதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 6000க்கும் அதிகமான சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 39 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்களது ரத்த மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையை மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறார்.

மேலும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா சோதனை, மாஸ்க் பயன்பாடு மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா? விமான நிலைய டெர்மினல்களில் போதிய அடிப்படை மருத்துவ கட்டமைப்புகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்ய இருக்கிறார்.

இந்நிலையில், BF7 கொரோனா பாதிப்பு பற்றி அச்சப்பட தேவையில்லை என்றாலும், அடுத்த 30 முதல் 40 நாட்கள் வரையில் இதன் பாதிப்பு இந்தியாவில் நிச்சயம் அதிகரிக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரித்து உள்ளது.

இதையடுத்து கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய சுகாதாரத் துறை மற்றும் தேசிய தடுப்பூசி நிபுணர்கள் குழு இணைந்து, BF 7 திரிபு வகை கொரோனா பாதிப்புக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளின் செயல்பாடுகளை புதிய முறையில் ஆய்வு செய்து வருவதாகவும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் பயன்பாட்டிற்கு வர உள்ள incovacc உள்ளிட்ட தடுப்பூசிகள் BF 7 பாதிப்பை முழுமையாக எதிர்கொள்ளும் திறனை படைத்து இருக்கிறதா? இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் ஏற்படுமா? என்றும், மத்திய நோய்த் தடுப்பு மற்றும் தடுப்பூசி நிபுணர்கள் குழுவினர் ஆலோசித்து வருவதாக, மத்திய சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.