தஞ்சை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்பொழுது அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் மணிகண்டன் கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் வியாபாரிகள் 46 கடைகளை திரும்ப கொடுத்தது தொடர்பாக கொண்டு வந்த தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதிமுக கவுன்சிலர் கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லாமல் மேயர் சண்.னராமநாதன் ஜெயலலிதா தண்டனை பெற்ற ஏ1 குற்றவாளி என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் ஊழல்வாதியான முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது சர்க்காரியா கமிஷன் விசாரணை நடத்தியது என்றும், தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் மீது பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறினார்.
இதனால் அதிமுக, அமமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோன்று துணை மேயர் அஞ்சுகம் பூபதி பாலியல் வழக்கு உள்ளதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இதனால் அவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக தஞ்சை மாமன்ற கூட்டம் போர்க்களமாக மாறியது.
பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்ட மேயர் சண்.ராமநாதன் திடீரென மாமன்ற கூட்டத்தை விட்டு எஸ்கேப் ஆனார். இதனால் தஞ்சை மாமன்ற கூட்டம் பாதியிலேயே முடிந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒருமையில் பேசிய மேயர் சண்.ராமநாதன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் தஞ்சையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என அதிமுக கவுன்சிலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.