வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நைபைடவ்: மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு, ஏற்கனவே 12 வழக்குகளில் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், தற்போது 5 ஊழல் வழக்குகளில் அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (வயது 77). இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020ல் நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தது. ஆனால், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது. இதனால், ஆங் சான் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கோவிட் விதிமுறைகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் போன்ற வழக்குகள் தொடரப்பட்டன. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மியான்மர் நீதிமன்றம், பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது. அதேபோல் தேர்தல் முறைகேடு வழக்கு, இன்னொரு ஊழல் வழக்கு என தற்போது அவரது சிறை தண்டனை காலம் 26 ஆண்டுகளாக உள்ளது.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீதான 18 மாத விசாரணையில் மீதமுள்ள 5 குற்றச்சாட்டுகளுக்கான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் இன்று (டிச.,30) அளித்தது. அதில் அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீட்டித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement