தேர்தல் ஆணைய முடிவைத்தான் மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது: ஓபிஎஸ்

மதுரை: “மத்திய அரசு தரப்பில் இபிஎஸுக்கும் மட்டும் கடிதம் அனுப்புவது இல்லை. இந்திய தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுத்திருக்கிறதோ, அந்த முடிவைத்தான் மத்திய அரசும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குஜராத் செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அதிமுகவின் கழக சட்ட விதிப்படி, கட்சியின் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் , கட்சியின் தொண்டர்கள் மூலமாக, ஒருங்கிணைப்பாளராக என்னையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் தேர்வு செய்தனர். இதுதான் உண்மை.

இடையில் பல்வேறு பிரச்சினைகளை செயற்கையை அவர் உருவாக்கினார். அதற்கு நான் பதில் சொல்ல தேவையில்லை. முறைப்படியாக இந்திய தேர்தல் ஆணையம், முறையாக ஒவ்வொரு கடிதத்திலும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டுத்தான், அன்றிலிருந்து இன்று வரை அனுப்பி வருகிறது. தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொண்டுதான், கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்த சொல்லி, கிளைக் கழகத்தில் இருந்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உட்பட பல்வேறு கட்டத் தேர்தல்களை நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம்” என்றார்.

அப்போது மத்திய அரசு தரப்பில் இபிஎஸுக்கும் மட்டும் கடிதம் அனுப்புவது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “இதுவரை அந்த மாதிரி இல்லை. இந்திய தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுத்திருக்கிறதோ, அந்த முடிவைத்தான் மத்திய அரசும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்றார்.

இபிஎஸ்ஸுக்கு பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்புவதை ஏற்றுக் கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அது தவறான தகவல்” என்றார்.

‘ஆர்விஎம்’ இயந்திரம் செயல்பாடுகள் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதி உள்ளார். இந்தக் கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்னமும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தில் உள்ளன என்பது இதன்மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று என்று குறிப்பிட்டு சட்ட ஆணையம் சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.