167 பேரை உடனே தனிமைப்படுத்துங்க: தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

கடந்த 2020-ம் ஆண்டு முதல் உலக நாடுகளை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம், விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முகக் கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமான பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அவருடன் பயணம் செய்த 167 பயணிகளை தனிமைப் படுத்தவும், அறிகுறி இருந்தால் உடனே தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா மற்றும் சீனா என வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மொத்தம் 10 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.