நேற்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், நரம்பியல் துறை சார்பில் நடைபெறும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ‘டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ எனப்படும் உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கியா இந்த நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மேடையில் பேசியதாவது:-
“சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆயிரம் படுக்கை வசதிகளுடன், சுமார் ஐந்து ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவையை வழங்குகிறது. நேர்மையான அரசு ஊழியர்களுக்கான புகலிடமே அரசு மருத்துவமனை தான். ஏனெனில், சமீபத்தில் மூத்த போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் உடல் நலக்குறைவு காரணமாக இந்த மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு மருத்துவமனையில், சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பொதுமக்கள் நலமுடன் வாழ முடியும். அரசு மருத்துவமனைகளில் உண்மையான சேவை மனப்பான்மை கொண்டுள்ள மருத்துவர்கள் உள்ளார்கள். எனக்கும் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அதற்காக நான் நான்கு ஆண்டுகள் முயற்சி செய்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. தற்போது நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மருத்துவராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு நல்ல செயல் தான். பொதுவாக போலீஸ் வேலையில் உடல் உழைப்பு அதிகம் என்பதால் அவர்களுக்கு முதுகு மற்றும் உடல் வலி அதிகம் ஏற்படும். சென்னையில் சுமார் இருபதாயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் மூன்றாவது திங்கட்கிழமைகளில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் புதிதாக தொடங்கப்படும் முதுகு வலி சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. இதனை அனைத்து போலீசாரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்” என்று அவர் பேசியுள்ளார்.