திருச்சி மாவட்டத்தில் கடனை திருப்பி தராததால் வாலிபரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் பகவதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தர் (28). இவர் பர்மா காலனியை சேர்ந்த ராமன் என்பவரிடம் 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து ராமன், சுந்தரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் சுந்தர் கொடுக்காததால் இவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் ராமன் வைத்துள்ள வடை கடையில் சுந்தரை பக்கோடா போட்டு கடன் அடைக்க கூறியுள்ளார்.
இதனால் சுந்தர் ராமன் கடையில் பக்கோடா போட்டு வியாபாரம் பார்த்து வந்துள்ளார். இருப்பினும் சுந்தரால் கடனை அடைக்க முடியாததால், ஆத்திரமடைந்த ராமன் சுந்தருக்கு அதிக அளவில் மது வாங்கி கொடுத்து பின்பு சுந்தரின் கை, கால்களை கயிற்றால் கட்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து ராமன் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு சென்று சுந்தரை கொலை செய்ததை தெரிவித்து சரணடைந்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்து கிடந்த சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.