திருமலை: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள உருக்காலை சாலையில் நேற்று முன்தினம் ஒரு காதல் ஜோடி பைக்கில் செல்வதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் முகம்சுளித்தனர். காரணம், பைக் ஓட்டிய வாலிபர் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது பள்ளி சீருடை அணிந்த ஒரு சிறுமியை அமர வைத்து தன்னை கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டினார். அப்போது, காதல் ஜோடியின் அந்த பைக் பயண காட்சியை காரில் சென்றவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். அந்த காட்சி வைரலாக பரவியதையடுத்து விசாகப்பட்டினம் போலீசார் அந்த காதல் ஜோடியை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். பின்னர் பைக் பதிவு எண்ணை ஆதாரமாக கண்டுபிடித்து இருவரின் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து போக்குவரத்து விதிகளை மீறியது குறித்தும், இவ்வாறு சென்று சற்று நிலை தடுமாறினால் இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடியும் எனக்கூறியதுடன் காதல்ஜோடியை தங்கள் பாணியில் கவனித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
