புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின. இந்நிலையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை 3.24 மணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில், கார் ஒன்றின் பின்பகுதியில் சடலம் இழுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. பின்னர் அதிகாலை 4.11 மணிக்கு வந்த மற்றொரு அழைப்பில், இளம்பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் சாலையில் கிடப்பதாக வந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட தகவல்களை வைத்து விசாரித்து, இளம்பெண் சடலத்தை இழுத்துச் சென்றகாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பலியான இளம்பெண் அமன் விகார் பகுதியை சேர்ந்தவர் என்பதும், திருமண நிகழ்ச்சிகளில் பகுதி நேரமாக வேலை செய்பவர் என்பதும் தெரிந்தது.
இவர் நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பும் போது, அவரது ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. காரின் பின்பக்கத்தில் இளம்பெண்ணின் கால் சிக்கி உள்ளது. இது தெரியாமல் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால், 4கிமீ தூரத்திற்கு இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் அவரது உடைகள் கிழிந்து நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ‘‘காரில் வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதில் முழு உண்மையும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்’’ என்றார்.