ம.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- “மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு பாஜகவின் ஒவ்வொரு கொள்கைகளையும் நிறைவேற்றி வருகிறது. இவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் 370-வது சட்ட பிரிவை நீக்கினார்கள்.
இவர்கள் நாட்டில் புதிய கல்வி கொள்கையை உருவாக்கி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்த நினைக்கிறார்கள். இந்தக் கொள்கையை தமிழக கவர்னரும் சனாதன சக்திகளின் உறுப்பினராக இருந்து ஆதரித்து பேசுகிறார்.
தமிழையும், திருக்குறளையும் மட்டும் பேசி மக்களை ஏமாற்றி விட முடியாது. மத்திய அரசு சமூக நீதியையும், மதசார்பற்ற தன்மையையும் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. வரி தொகையை வழங்குவதில் மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது.
தமிழகத்தில் சகோதரர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நாட்டில் சிறந்த ஆட்சியாக பாராட்டப்படுகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எந்த முயற்சியும், போராட்டமும் எடுபடாது” என்று அவர் தெரிவித்தார்.