சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்: 90 ஆயிரம் பேர் இன்று முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். இன்றும் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் அதிகாலை முதலே சன்னிதானத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. மண்டல காலத்தில் தினமும் சராசரியாக 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்த நிலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது.

புத்தாண்டு தினமான நேற்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினசரி ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் நிலக்கல், எருமேலி, பம்பை உள்பட கேரளாவில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு கவுன்டர்கள் மூலம் பக்தர்கள் பதிவு செய்து தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று காலை வரை 89 ஆயிரத்து 900க்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதனால் அதிகாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மகரவிளக்கு பூஜை நடைபெறும் வரும் 14ம் தேதி வரை தரிசனத்திற்கான முன்பதிவு அனைத்தும் முடிந்து விட்டது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால்  ஒரு மணி நேரத்தில் போலீசார் 4500க்கும் அதிகமானோரை பதினெட்டாம்படி வழியாக ஏற்றி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.