மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் | உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 பேர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும் ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான 58 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பின் சாராம்சம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் முழுமையான தீர்ப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு பின்னணி: மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் இனிமேல் செல்லாது என அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஒரே இரவில் பல கோடி மதிப்பிலான இந்திய ரூபாய் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அதனால் அதனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக 58 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ஐந்து நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் பி.ஆர்.காவை, பி.வி. நாகரத்னா, ஏ.எஸ் போபன்னா, மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த அமர்வு நீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறைக்கு முன்பாக கடந்த ஆண்டு டிச.7 ஆம் தேதியில் வாதங்கள் அனைத்தையும் கேட்டுவிட்டு, தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில்,மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்துள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.