`அரசு மருத்துவமனையில கருத்தடை சிகிச்சை அலட்சியத்தால பாதிக்கப்பட்டேன்’ – கலெக்டரிடம் மனுகொடுத்த பெண்

ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி வைஜெயந்திமாலா(22). இவர் தன் பெற்றோர் மற்றும் கணவரின் குடும்பத்தாருடன் ராமநாதபுரம் ஆட்சியரை சந்தித்து, அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் மனு அளித்தார்.

தன் மனு குறித்து வைஜெயந்திமாலா கூறும்போது, “எனக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாகின்றன. என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைப்பிரசவத்திற்காக சத்திரக்குடி அரசு மருத்துவமனையில் பெற்றோர் என்னை அனுமதித்தனர். அங்கு சுகப்பிரசவத்தில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவர்கள், அதிக ரத்தப்போக்குக்கு சிகிச்சையாக காப்பர் டி கருத்தடை சாதனம் பொருத்தினர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த பின் எனக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்ததால் என்ன காரணம் என தெரியாமல் பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன்.

பெற்றோருடன் வைஜெயந்திமாலா

அங்கு எனக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, கருத்தடை சாதனம் பொருத்தியபோது கருக்குழாயையும் தைத்துள்ளதாகவும் அதன் காரணமாவே இவ்வாறு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கருக்குழாயை சேர்த்து தைத்துவிட்டதால் இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து என் பெற்றோர் மற்றும் என் கணவர் பெற்றோருடன் சத்திரக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று காரணம் கேட்டபோது மருத்துவர்கள் அலட்சியமாக பதில் அளித்தனர். எனக்கு தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதோடு வயிற்று வலி அதிகமாகி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரித்து பாதிக்கப்பட்ட எனக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும். தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், சிகிச்சை செய்த மருத்துவர்கள் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.