புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் தொலைபேசியில் உரையாடியதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் அரசப் பதவியில் இருப்பவர்கள் பிற நாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் அரிதாகவே பேசுவது வழக்கம் என கூறப்படுகிறது. பிரதமர் மோடியை தொலைபேசியில் நேற்று( செவ்வாய் கிழமை ) தொடர்பு கொண்ட மன்னர் சார்லஸ், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ”பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய மன்னர் சார்லஸ், காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு, மாற்று எரிபொருட்களுக்கான புதுமை தீர்வுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது, இந்த விவகாரங்களில் மன்னருக்கு இருக்கும் ஆர்வத்துக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்கும் நிலையில், அதன் முன்னுரிமைகள் என்னென்ன என்பது குறித்து பிரதமர் மோடி மன்னரிடம் விளக்கிக் கூறினார். தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்தியாவுக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி விளக்கிக்கூறினார்.
காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் இருநாடுகளையும் இணைக்கும் பாலமாக திகழ்ந்து வருவதாக மன்னர் மகிழ்ச்சி தெரிவித்ததார். சார்லஸ், மன்னரான பிறகு முதல் முறையாக அவர் பிரதமர் மோடியுடன் உரையாடி உள்ளார். இதற்காக, பிரதமர் மோடி மன்னருக்கு வாழ்த்து தெரிவித்தார்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.