உயர் நீதிமன்றத்தில் வழக்கு:
உத்தரகாண்டில் ஹல்த்வானி நகரில் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா ஆகிய பகுதிகள் இருக்கின்றன. இங்கு 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. மக்கள் தொகை 50,000க்கும் மேல் இருக்கிறது. மேலும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், வங்கி, மசூதிகள், கோயில்கள் இருக்கின்றன. இந்நிலையில் இந்த நிலம் ரயில்வேயிக்குச் சொந்தமானது என்றும் 29 ஏக்கர் அளவுக்கு ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்தே மக்கள் தங்கள் வீடுகளை இங்குக் கட்டியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

எனவே இப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்து வந்த நீதிமன்றம் கடந்த டிசம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், “2023 ஜனவரி 9-ம் தேதிக்குள் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், துணை ராணுவப் படையைப் பயன்படுத்தியும் அகற்றலாம்” என்று தெரிவித்தது.
இதையடுத்து இம்மாதம் 9-ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனைவருக்கும் அனுப்பியது. இதனால் அப்பகுதியில் நீண்ட நாள்களாக வசித்து வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்தனர். குறிப்பாக ஊர்வலங்கள், பிரார்த்தனைகள் போன்றவற்றில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
மனிதாபிமானம் தொடர்புடைய விஷயம்:
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “50 ஆயிரம் மக்களை இரவோடு இரவாக அகற்ற முடியாது. இது மனிதாபிமானம் தொடர்புடைய விஷயம். துணை ராணுவப்படையைப் பயன்படுத்தி அம்மக்களை அகற்ற வேண்டும் என்று கூறுவது சரியல்ல. இவ்விவகாரத்தில் நடைமுறைக்கு ஏற்ற தீர்வு உருவாக்கப்பட வேண்டும்” என்று கூறி, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்ற அமர்வு தடைவிதித்தது. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.

10-க்கு 10 அறையில் வாசிப்பு:
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு ஏழைகளே அதிகம். 10க்கு 10 அறைகளில் வசித்து வருகிறோம். ஒரு அறையில் சில பாத்திரங்களும் மறுபுறம் விறகு அடுப்பும், கூரை என்ற பெயரில் பிளாஸ்டிக் தாள்களும், கதவாக தேய்ந்து போன திரைச்சீலைகளும் இருக்கின்றன.
நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் இங்கு வாழ்ந்தோம். நான் இங்கு தான் பிறந்தேன். என் குழந்தைகள் இங்குதான் பிறந்தார்கள். அவர்களின் குழந்தைகள் இங்கு பிறந்தனர். இவர்கள் எங்கள் வீடுகளை எடுத்துச் சென்றால் நாங்கள் எங்கே போவோம்? நீங்கள் எங்களை வெளியேற்றினால், மீள்குடியேற இடமொன்றை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். ஆனால் அவர்கள் உடனடியாக காலி செய்ய சொல்கிறார்கள்” என்று கூறினர்.

90 ஆண்டுகள் குத்தகை:
இந்த வழக்கை ஆரம்பம் முதல் கண்காணித்து வருபவர்கள், “ஹல்த்வானி ஸ்டேஷனை நெருங்கும் ரயில் பாதையை ஒட்டி இந்த பகுதி பரவியிருக்கிறது. ஆரம்பத்தில் மலைகளில் கால்நடை மேய்ப்பவர்களுக்கு குளிர்கால தங்குமிடமாக இருந்தது, பின்னர் வர்த்தக மையமாக மாறியது. வெல்லம், உருளைக்கிழங்கு, மரம், சுண்ணாம்பு போன்றவற்றின் பெரிய சந்தையாக இது உருவானது. ஹல்த்வானியை ஒட்டியுள்ள ரோஹில்கண்ட் பகுதியிலிருந்து ஏராளமானோர் வேலை தேடி இங்கு வந்தனர்.
ஆங்கிலேய அரசு இவர்களுக்கு 90 ஆண்டுகள் குத்தகைக்கு நிலம் கொடுத்து இங்கு குடியமர்த்தியது. ஸ்டேஷன் அருகில் உள்ள இந்தப் பகுதிக்கு அப்போது பன்பூல்புரா என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியை காலி செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள மனுவுக்கும் நேரடியாக ஆக்கிரமிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1998-ம் ஆண்டில், ஹல்த்வானி மற்றும் ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் கோலா நதியில் பாலம் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்தது.

இடிந்த பாலம்:
பாலம் 2004-ல் கட்டி முடிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின், தொடர் மழையின் போது பாலம் இடிந்து விழுந்தது. பாலம் இடிந்ததற்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 2012-ல், சமூக ஆர்வலர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். ரயில்வே நிலத்தில் பாலம் கட்டப்பட்டதால், நீதிமன்ற உத்தரவின் பேரில் ரயில்வே துறையும் வழக்கில் இணைக்கப்பட்டது. இதை விசாரிக்க நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது.

குழு தனது அறிக்கையில், “பாலம் இடிந்து விழுந்ததற்கு மோசமான வடிவமைப்பு, சாதாரண கட்டுமானம் மற்றும் சட்டவிரோத சுரங்கம் ஆகியவை காரணம்” என்று கூறியுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், கோலா நதியில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதற்கு, 29 ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் காரணம் என்று ரயில்வே கூறியுள்ளது.
பொதுமக்களுக்கு நோட்டீஸ்:
இந்த பிரமாணப் பத்திரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், 29 ஏக்கர் ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு மாநில அரசுக்கு 2016-ல் உத்தரவு பிறப்பித்தது. பாலம் கட்டப்பட்ட பொதுப்பணித் துறை, குறைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த விஷயத்தை சட்டவிரோத சுரங்கத்தின் பக்கம் திருப்பினர்.
இதனால் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 2017ம் ஆண்டு மக்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இதன் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன் நோட்டீஸ் அளித்து, இடத்தை காலி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இந்த வழக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. 2022-ல், உயர் நீதிமன்றம், கோலா பாலத்தின் வழக்கை தள்ளுபடி செய்யும் போது, ஆக்கிரமிப்பு விவகாரத்தில் புதிய பொதுநல மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புக்கு எதிராக புதிய பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஹல்த்வானியில் இருக்கும் ரயில்வே துறையின் அனைத்து நிலங்களையும் விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது” என்றனர்.