கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணின் முடியை பிடித்து இழுத்து வெளியேற்றிய அறங்காவலர்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வழிபாடு செய்ய சென்ற பெண் ஒருவரை கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர் அடித்து தாக்கிய வீடியோ வைரலாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கோயிலுக்கு வந்த பெண் தூய்மையாக இல்லை என்றும், அவர் குளிக்காமல் கோயிலுக்கு வந்ததாகவும், கருப்பாக இருப்பதாகவும் கூறி, அறங்காவலர் முனிகிருஷ்ணப்பா திட்டியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை கோயிலுக்குள் வர கூடாது என கூறி, இரும்பு தடி கொண்டு அடித்துள்ளார்.

கோயில் பூசாரிகள் அவரை தடுத்தனர். ஆனால் முனிகிருஷ்ணப்பா, பூசாரியையும் மிரட்டினார். பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். ஆனால் முனிகிருஷ்ணப்பா தரப்பட்டுள்ள புகாரில், அந்தப் பெண் கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றார் என்றும், பூசாரிகள் அவரை தடுத்து நிறுத்தியபோது அவர்களில் ஒருவர் மீது அந்த பெண் எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது. அதனால் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இருதரப்பு புகாரையும் பெற்று கொண்ட நிலையில், பெண் மீது தாக்குதல் நடந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.