பொங்கலுக்கு 6 அடிக்கு குறைவான கரும்புகள்: ராமதாஸ் வலியுறுத்தல்!

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது.

அந்த வகையில், நடப்பாண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ.1000 ரொக்கத்துடன் சேர்த்து முழு கரும்பு ஒன்றை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 9ஆம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

முன்னதாக, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு மற்றும் ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட மளிகை பொருட்கள் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. கரும்பு விவசாயிகள் மிகவும் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பு ஒன்றையும் சேர்த்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, கரும்பு கொள்முதலுக்கு நிதி ஒதுக்கியும், கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கரும்புக்கு உண்டான தொகை அதிகபட்சமாக போக்குவரத்து செலவுகள் உட்பட ஒரு கரும்புக்கு ரூ.33 வீதம், ரூ.72.38 கோடி நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொங்கலுக்கு விவசாயிகளிடமிருந்து 6 அடிக்கும் குறைவான கரும்புகளை கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர்
ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடமிருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது.

ஆனால், 6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பதால் அதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. ஆனால், காலமும், சூழலும் இந்த விஷயத்தில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும். 6 அடி உயரத்திற்கும் குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிடுகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் கரும்புகள் வீணாகி விடும். பொங்கலுக்கு இன்னும் 8 நாட்கள் இருப்பதால் அகற்றப்படும் கரும்புகளை சந்தையிலும் விற்க முடியாது.

கரும்பின் உயரம் சில காரணங்களால் குறைவது இயல்பு. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. அதனால் உழவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.