“ஆண்கள் அலட்சியம், பெண்கள் படித்தால்தான் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடியும்!" – நிதிஷ் குமார்

உலகின் மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியைத் தொட்டுவிட்ட நிலையில், இப்போதைக்கு சீனாவே 142 கோடி மக்கள்தொகையுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால், சீனாவைவிட எண்ணிக்கையில் 1 கோடி மட்டுமே குறைவாக 141 கோடியுடன் இரண்டாவது இடத்திலிருக்கும் இந்தியா இந்தாண்டுக்குள் சீனாவைப் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

மக்கள்தொகை

இதற்கிடையில், பா.ஜ.க தலைவர்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறிவருகின்றனர். இந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், `ஆண்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். பெண்கள் படித்தால்தான் மாநிலத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடியும்’ எனக் கூறியிருக்கிறார்.

வைஷாலியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நிதிஷ் குமார், “மக்கள்தொகை இன்னும் குறையவில்லை. அதே விகிதத்தில்தான் இருக்கிறது. பெண்கள் படித்தால்தான் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடியும். பெண்கள் படித்திருந்தாலோ அல்லது மக்கள்தொகையைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தாலோ கர்ப்பம் தரிப்பதிலிருந்து எப்படி தங்களைப் பாதுகாத்துக்கொள்வது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

நிதிஷ் குமார்

ஆண்களும் அலட்சியமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களின் செயல்களுடைய முடிவுகளைப்பற்றி சிந்திக்கத் தயாராக இல்லை. இதனால் மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தடுக்க முடியவில்லை” என்று கூறினார்.

நிதிஷ் குமாரின் இத்தகையப் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனத்தைப் பெற்றுவருகிறது. இது குறித்து பீகார் எதிர்க்கட்சியான பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ சாம்ராட் சவுத்ரி, “முதல்வர் நிதிஷ் குமார் பயன்படுத்திய அநாகரிகமான வார்த்தைகள் அறிவின்மையின் உச்சம். இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம், முதல்வர் பதவியின் கண்ணியத்தை அவர் கெடுக்கிறார்” என விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.