தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் இந்தியா வருது..! ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கி புலி இந்தியா கொண்டு வரவுள்ளதாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் அழிந்துபோன இனமாக இருந்த சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி தனது பிறந்த நாளன்று திறந்துவிட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு, அவை வனப்பகுதியில் திறந்து விடப்பட்டன. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இம்மாதம் 20ம் தேதி கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அதிபர் சிறில் ரமபோசா, இந்தியாவுக்கு 12 சிவிங்கிப் புலிகளை அனுப்புவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படும்’ என்றார். மேலும் இதுகுறித்து ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்ச வட்டாரங்கள் கூறுகையில், ‘சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வனத்துறை இயக்குநர் சந்திர பிரகாஷ் கோயல், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் எஸ்.பி.யாதவ் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மற்ற அதிகாரிகள் அடங்கிய குழு வரும் ஜனவரி 13ம் தேதி டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்கா சென்று சிவிங்கிப் புலிகளை கொண்டு வருவார்கள்’ என்று கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.