புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முயற்சி; மாஜி எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது: ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

கவுகாத்தி: அசாம் மாநிலம் பக்சா பகுதியில் வசிக்கும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஹிதேஷ் பாசுமதாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்களது வீடுகளில் வெடிபொருட்கள், ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கோக்ராஜார் கூடுதல் போலீஸ் ஏஎஸ்பி நவநீதா சர்மா கூறுகையில், ‘முன்னாள் எம்எல்ஏவின் வீட்டில் இருந்து நவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன.

அதையடுத்து நேற்றிரவு ஹிதேஷ் பாசுமதாரியும், வெவ்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்த போடோலாந்து சுரக்ஷா மஞ்சின் நிர்வாகத் தலைவர் தவோராவ் டெஹ்ராப் நர்சாரி மற்றும் போடோலாந்து ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் தலைவர் பிக்ரம் டைமரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் புதியதாக தீவிரவாத அமைப்பை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாவும், அந்த அமைப்பில் இளைஞர்களை சேர்த்து வருவதாகவும் ஏற்கனவே உளவு தகவல்கள் கிடைத்தன. கோக்ராஜரில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.