கட்டாய மதமாற்ற பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசக் கூடாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கட்டாய மதமாற்றம் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது என்று கூறியுள்ளது.

ஆசை காட்டியும், அச்சுறுத்தியும், பரிசுகள் வழங்கியும், பணம் அளித்தும் மதமாற்றங்கள் நடப்பதாகவும், இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் கூறி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய தொடர்ந்த பொதுநல மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி. ரவிகுமார் அடங்கிய அமர்வு முன் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் மதமாற்றங்கள் நிகழ்கின்றன. ஆசை காட்டியும் அச்சுறுத்தியும் நடைபெறும் மதமாற்றங்களைத் தடுக்க, இதனை சரி செய்ய எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதில் நீதிமன்றத்திற்கு அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் உதவி தேவை. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுபவராக நீங்கள் செயல்பட வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன், “இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. எங்கள் மாநிலத்தில் இதுபோன்ற பிரச்சினையே இல்லை” என தெரிவித்தார்.

வில்சனின் வாதத்தில் குறுக்கிட்ட நீதிபதிகள், ”இதை எதிர்ப்பதற்கு உங்களுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தின் நடவடிக்கைளை திசை திருப்பாதீர்கள். நாங்கள் நாடு முழுக்க உள்ள பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பேசுகிறோம். உங்கள் மாநிலத்தில் இந்தப் பிரச்னை இருந்தால் அது தவறு; இல்லாவிட்டால் நல்லது. இந்த பிரச்சினையை ஒரு மாநிலத்தின் பிரச்சினையாகப் பார்க்காதீர்கள். இதை அரசியலாக்காதீர்கள்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கட்டாய மதமாற்றம் மிகப் பெரிய பிரச்சினை என சமீபத்தில் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இத்தகைய மதமாற்றங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும், மக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கக்கூடியதாகவும் உள்ளதாக தெரிவித்திருந்தது. அதோடு, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தேவையான நடவடிக்கைகளை உண்மையான முனைப்போடு எடுக்குமாறு மத்திய அரசை அது கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.